திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டல பாசன பகுதிகளுக்கு நாளை (ஆகஸ்ட் 28) தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அதை ஏற்று, திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசன பகுதிகளுக்கு நாளை (ஆகஸ்ட் 28) முதல் மொத்தம் 8, 700 மி.கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.
இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர் வட்டங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், காங்கேயம், தாராபுரம் வட்டங்களில் உள்ள 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெறவேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
**-ராஜ்**�,