நட்சத்திர ஜோடியாக இருந்த சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து குறித்து நாகர்ஜுனா மனம் திறந்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய சமந்தாவுக்கும் நடிகர் நாகர்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு காதல் திருமணம் கோவாவில் நடைபெற்றது. ஆனால், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமண உறவில் இருந்து பிரிவதாக இருவரும் அறிவித்தனர்.
தற்போது நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகர்ஜுனா தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் சமந்தா தான் முதலில் விவாகரத்து கேட்டார் என இது குறித்து மனம் திறந்துள்ளார்.
சமந்தா விவாகரத்து பிறகு கேட்ட பின்பு நாக சைதன்யாவும் ஒப்புக்கொண்டார். மேலும் அவர் எங்களைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் யோசித்தார். பின்பு எங்களையும் சமாதானப்படுத்தினார். இருவரும் நான்கு வருடங்கள் ஒன்றாகத்தான் இருந்தார்கள். கடந்த புது வருடத்தைக்கூட ஒன்றாகவே இருந்து கொண்டாடினார்கள். அதன் பின்புதான் பிரச்சினைகள் உருவாகி இருக்கக்கூடும் எனவும் அந்தப் பேட்டியில் பேசியுள்ளார்.
மேலும் நாக சைதன்யாவும் இந்த விவாகரத்து குறித்து சமீபத்தில் பேசினார். அதில், “இந்தப் பிரிவு சரியான ஒரு முடிவுதான். சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். இந்தச் சூழ்நிலையில் இருவருமே பிரிவது சரியானதுதான்” எனச் சொல்லியிருந்தார்.
சமந்தா தற்போது இந்த விவாகரத்து குறித்தான பதிவைத் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல், ஹாலிவுட், தெலுங்கு படங்கள் மற்றும் வெப் சீரிஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
அதோடு தற்போது சமந்தா சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார் அங்கு குழந்தையாக மாறி அவர் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது கீழே விழுந்து புரளும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் நாக சைதன்யாவும், தனது தெலுங்கு சினிமாவில் இருந்து இந்தி சினிமா வரை சென்றுவிட்டார். அங்கு அமீர்கானுடன் லால் சிங் சட்டா என்கிற படத்தில் நடித்துள்ளார். இதுதவிர சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பங்கார்ராஜு என்கிற படம் பம்பர் ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
**ஆதிரா, இராமானுஜம்**
�,”