சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றுள்ள சசிகலா தற்போது 4ஆவது ஆண்டாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். 2021 சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் சசிகலா விரைவில் வெளியே வருவார், அதிமுகவில் இணைவார் அல்லது அதிமுக அமமுகவை இணைப்பார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அமமுக பொதுச் செயலாளர் தினகரன், ”சசிகலா அதிமுகவில் இணையமாட்டார்” என்று கூறி வருகிறார்.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி, ”சசிகலா விடுதலையானால் தமிழக அரசியலில் மாற்றம் வரும். அவரது பின்னால் ஒரு சமுதாயம் நிற்கிறது. அவர் வெளியே வந்த பிறகு சசிகலா இல்லாமல் அரசியல் செய்வது கடினம். ஆனால் அவரால் தேர்தலில் 6 ஆண்டுகளுக்குப் போட்டியிட முடியாது. தமிழகத்தில் சினிமாதான் பார்ப்பார்கள் சட்டத்தைப் படிக்கமாட்டார்கள்” என்று குறிப்பிட்டார்.
இந்தியப் பொருளாதாரம் மோசமாக இருப்பதாகவும், அதனைச் சரி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்த அவர், சிஏஏ யாருடைய உரிமையையும் பறிக்கப்போவதில்லை, யாருக்கெல்லாம் குடியுரிமை கொடுக்க வேண்டுமோ கொடுத்தாகிவிட்டது. இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது. இந்துக்கள் ஒற்றுமையைக் கெடுப்பதற்கும், நாட்டின் பெயரைக் கெடுப்பதற்கும் சிலர் சதி செய்து வருகின்றனர். ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்தலாம். ஆனால் பொய் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது என்றார்.
**கவிபிரியா**�,