தொலைக்காட்சி, நாளிதழ் போன்ற ஊடகங்களில் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களை தவிர மற்றவர்கள் கருத்துத் தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை எச்சரித்துள்ளது.
தொலைக்காட்சி, நாளிதழ், இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் அரசியல் தொடர்பான விவாதங்கள் வழக்கமாகியுள்ளது. அனைத்துக் கட்சிகளிலும் ஊடக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள செய்தி தொடர்பாளர்களும் உள்ளனர். அதிமுகவை பொறுத்தவரைத் தலைமையின் அனுமதி இல்லாமல் பலரும் ஊடக விவாதங்களில் பங்கேற்பதாக கூறப்படுகிறது. இதனைத் தடுக்கும் விதத்தில் அதிமுக தலைமை இன்று (ஜூலை 8) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், “தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் விவாதங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதிமுகவின் கருத்துக்களை எடுத்துரைப்பதற்காக செய்தி தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் மட்டுமே தொலைக்காட்சிகள் மற்றும் சமூகத் தொடர்பு ஊடகங்களில் நடத்தப்படும் விவாதங்கள் மற்றும் பிற நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, அதிமுகவை சேர்ந்தவர்கள் மற்றும் தோழமை கட்சியினர் என்பது போன்ற அடையாளங்களைக் கூறிக்கொண்டு சிலர் தொலைக்காட்சிகளில் கூறிவரும் கருத்து கட்சியின் கருத்து அல்ல. அவ்வாறு தங்கள் கருத்துகளைக் கட்சியின் கொள்கையாக எடுத்துரைக்க யாருக்கும் அனுமதியோ, ஒப்புதலோ தரப்படவில்லை.
கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் மட்டுமே, கருத்துக்களை எடுத்துரைப்பார்கள்.
இதை மீறும் நபர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் இதுபோன்ற நபர்களை அதிமுகவை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,