தமிழகம் முழுவதும் நுகர்வோர் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களை ஐந்து வாரங்களுக்குள் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மாநிலம் முழுவதும் நுகர்வோர் நீதிமன்றங்கள் உள்ளன. நுகர்வோர் பிரச்சினைகள் தொடர்பாகக் கொள்கை முடிவுகளை எடுக்க, மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களின் குறைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முடியவில்லை” என்று கூறி, கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் எனும் நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த என்.லோகு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அரசாணை எண் 167,168இன்படி, தமிழகத்தில் மாநில நுகர்வோர் பாதுகாப்புக் குழு மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நியமனம் செய்ய வேண்டும் என்றும், ஆனால் இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை என்றும், அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (அக்டோபர் 12) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐந்து வாரத்திற்குள் உறுப்பினர்களை நியமனம் செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள்.�,”