மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பணமதிப்பழிப்பின் தாக்கம் நிலையற்றது எனவும், இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருப்பதாகவும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாகவே இந்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே பனிப்போர் மூண்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியில் அரசு தலையிடுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுபோன்ற சூழலில் ரிசர்வ் வங்கியின் ஆளுநரான உர்ஜித் படேல், மத்திய அரசின் பணமதிப்பழிப்பால் ஏற்பட்ட தாக்கங்கள் நிலையற்றவைதான் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். நிதி விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் முன் பதிலளித்த உர்ஜித் படேல், இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது கண்ணோட்டத்தையும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்கள் எழுப்பிய சில சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு உர்ஜித் படேல் எழுத்துபூர்வமாகப் பதிலளிக்கவுள்ளார்.
இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்துப் பேசிய உர்ஜித் படேல், “கச்சா எண்ணெயின் விலை சீராகி வருவதால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி சற்று அதிகரிக்கும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மேம்பட்டு பணவீக்கம் 4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது” என்றவர், ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தில் அரசு தலையிடுகிறதா என்பது தொடர்பான கேள்விகளுக்குச் சரியான பதில் எதையும் வழங்காமல் தவிர்த்துள்ளார். வங்கிகளுக்கான மூலதன விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது ஜி-20 நாடுகள் கூட்டமைப்புக்கு வழங்கிய உறுதியின் பேரில் செயல்படுத்தப்பட்டதாக விளக்கமளித்துள்ளார்.�,