எருமை மாடு பால் கொடுக்க மறுக்கிறது: போலீஸில் புகார்!

public

எருமை மாடு பால் கொடுக்க மறுப்பதாகக் கூறி விவசாயி ஒருவர், போலீஸில் புகார் செய்திருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் அருகில் உள்ள நயாகாவ் கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயது பாபுலால். விவசாயியான பாபுலால் வீட்டில் எருமை மாடு ஒன்று வளர்த்து வருகிறார். அந்த எருமை மாடு திடீரென கடந்த சில நாள்களாகப் பால் கறக்க பாபுலாலை அனுமதிக்காமல் முரண்டு பிடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அதனால், பாபுலால் இது குறித்து கிராமத்தில் உள்ள சிலரிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். அவர்கள் மாட்டுக்கு ஆவி பிடித்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். அதை நம்பிய பாபுலால், மாட்டுக்கு யாரோ பில்லி சூனியம் வைத்திருப்பதாகக் கருதியிருக்கிறார். அத்துடன், தன் எருமை மாடு பால் கொடுக்க மறுப்பதாக, போலீஸிலும் புகார் அளித்தார்.

பாபுலாலின் புகாரைக் கேட்டு வியப்படைந்த போலீஸார், அவரிடம் மாட்டைக் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். ஆனால், விவசாயி பாபுலால், மீண்டும் சில மணி நேரம் கழித்து, தன் மாட்டை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்துக்குள் நுழைந்திருக்கிறார். மாட்டைக் கண்டு மிரண்டு போன போலீஸார், பாபுலாலை விசாரித்திருக்கின்றனர்.

அப்போது, வீட்டுக்கு வந்து பால் கறக்க உதவி செய்யும்படி பாபுலால் போலீஸாரிடம் கேட்டிருக்கிறார். அதையடுத்து, மீண்டும் கால்நடை மருத்துவரை அணுகி ஆலோசனை பெறும்படி கூறி போலீஸார் அவரை அனுப்பி வைத்தனர். பின்னர், ஒருவழியாக பாபுலால் மாட்டை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார். அதன் பிறகு, எருமை மாடு பால் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.

உடனே பாபுலாலுடன் கிராம மக்கள் காவல் நிலையத்துக்கு வந்து, மாடு பால் கொடுக்க ஆரம்பித்துவிட்டதாக மகிழ்ச்சி பொங்க கூறி நன்றி தெரிவித்தனர். இந்த விநோத சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

இதற்கு முன்பு, மகாராஷ்டிரா கோழிப்பண்ணையில் தீவனத்தைத் தின்ற கோழிகள் முட்டையிடவில்லை என்று கூறி கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சிலர் போலீஸில் புகார் செய்தனர். கோழி தீவனத்தை திடீரென மாற்றியதால் இப்பிரச்சினை வந்திருக்கலாம் என்று கூறி போலீஸார் அனுப்பி வைத்தனர். அதோடு கோழி தீவனத்தை விற்பனை செய்த தீவன கம்பெனி உரிமையாளர்களிடமிருந்து இழப்பீடும் வாங்கி கொடுத்தனர்.

இந்த நிலையில், தற்போது விவசாயி பாபுலால் மாட்டை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்துக்குச் சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *