தமிழகத்தில் நீரா பானத்தின் அறிமுக விழா கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதை கலெக்டர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.
மாவட்ட தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கடந்த டிசம்பர் மாதம் நீரா இறக்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கியது. இந்நிலையில் 87 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்து வரும் கோவை மாவட்டத்தில், நீரா பானத்தை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் அனுமதி கோரி 3 நிறுவனங்கள் விண்ணப்பித்தனர். இதில் ஆனைமலை தென்னை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம், பொள்ளாச்சி விநாயகா தென்னை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம், கோவை தென்னை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் அடங்கும். இதற்கான அறிமுக விழா நேற்று கோவையில் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் நீரா பானம் அருந்தித் தொடங்கி வைத்தார். இந்தப் பானத்தை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் இதற்கான உற்பத்திக்கும், விற்பனைக்கும் உரிமம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
உரிமம் பெற்றவுடன் நாள் ஒன்றுக்கு ஆயிரம் லிட்டர் நீரா இறக்குமதி செய்து உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும், இதன் விலை, லிட்டருக்கு நூறு ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் எனவும் தென்னை விவசாய நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். நீராபான அறிமுக விழாவில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சக்திவேல்,கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன் ராஜ் சாமுவேல், வேளாண்மை வணிக பிரிவு துணை இயக்குநர் பழனிசாமி, கலால் துறை துணை இயக்குநர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.�,