கோரக்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக ஆக்சிஜன் சப்ளையரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதத்தின் ஒரே வாரத்தில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணமடைந்தன. பெரும்பாலானவை பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகள் ஆகும். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. போதிய ஆக்சிஜன் கையிருப்பு இல்லாததே இச்சம்பவத்துக்குக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது.
மருத்துவமனை நிர்வாகம் முறையாக பணத்தை செலுத்தவில்லை என்பதால் ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனம் சிலிண்டர்களை அனுப்புவதை நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்த மாபெரும் துயர சம்பவம் நிகழ்ந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக, மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் ராஜிவ் மிஸ்ரா, அவரது மனைவி மற்றும் மருத்துவர் கஃபில் கான் உள்ளிட்டோர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஆக்சிஜன் சப்ளை செய்துவந்த புஷ்பா ஏஜென்சி உரிமையாளர் மணிஷ் பண்டாரியை தலைமறைவான நபர் என அறிவித்து போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் இன்று (செப்.17 ) காலையில் கோரக்பூர் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மூத்த போலீஸ் கண்காணிப்பாளரான அனிருத் சித்தார்த்த பங்கஜ் பிடிஐ ஊடகத்திடம் தெரிவிக்கையில், ‘ புஷ்பா ஏஜென்சியின் முதலாளி மணிஷ் பண்டாரியை டெயோரியா பகுதியில் வைத்து இன்று காலை போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறியுள்ளார்.�,