சசிகலாவைச் சிறையில் சந்தித்துவிட்டுத் திரும்பிய பிறகு செய்தியாளர்களுக்கு நேற்று மாலை (2.8.2017) பேட்டியளித்தார் டி.டி.வி.தினகரன். அப்போது செய்தியாளர்கள் சிலர் நிதியமைச்சர் ஜெயக்குமார் கருத்து தொடர்பான கேள்விகளை எழுப்பினர். அதற்குப் பதிலளித்து பேசிய தினகரன், “அதைப்பற்றி பேசினால் உங்களுக்கும் சலித்துவிடும். எனக்கும் சலித்துவிடும். ஜெயக்குமார் கருத்து தொடர்பாகப் பேசுவது எனக்குச் சரியாக தெரியவில்லை” என்றார்.
மேலும் அவரிடம், சசிகலா சந்திப்பு மற்றும் கட்சி பணி குறித்த கேள்விகளைச் செய்தியாளர்கள் முன்வைத்தனர். அதற்கு அவர், “சிறையில் பொதுச்செயலாளர் சசிகலாவைச் சந்தித்து நலம் விசாரித்தேன். கட்சிப் பணிக்காக அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்வேன். எப்போது செல்வேன் என உங்களிடம் சொல்வேன்.
கட்சி செயல்படாமலே உள்ளது. அதைச் செயல்படுத்தவே நான் செயல்பட உள்ளேன். துணைப் பொதுச்செயலாளரைக் கட்சி அலுவலகத்தில் வராமல் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. என்னைக் கட்சியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதை நான் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கை குறித்துப் பொறுத்திருந்து பாருங்கள். எல்லோரும் நண்பர்கள்; திருத்திக்கொள்வார்கள் என நினைக்கிறேன். யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது தெரிந்திருந்தால் அவர்கள் இப்படிப் பேசியிருக்க மாட்டார்கள். பயத்தினால் பேசி உள்ளனர். அவர்கள் மன பிரமையில் உள்ளனர். அதிலிருந்து வெளியாகிச் செயல்படுவார்கள், தலைமையை ஏற்பார்கள். கூடிய விரைவில் பயம் சரியாகும். எனக்கு 122 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு உள்ளது. எனக்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாததால் அரசின் செயல்பாடு குறித்துக் கூற இயலாது. யாருடனும் சண்டைப் போடும் பழக்கம் எனக்கில்லை. நடராசனும், திவாகரனும் எனக்கு உறவினர்கள்” என்று கூறியுள்ளார்.�,