பாலேஸ்வரத்தில் உள்ள முதியோர் காப்பகம் இரு நாள்களில் மூடப்படும் என்று மாவட்ட வருவாய் அதிகாரி நூர் முகமது கூறியுள்ளார்.
காஞ்சிபுரம், உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கத்தை அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த தாமஸ் என்ற தனியாருக்குச் சொந்தமான செயின்ட் ஜோசப் தொண்டு நிறுவனம், கடந்த ஏழு ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் சாலையோரம் வாழும் முதியவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து அடைக்கப்படுவதாகவும், அடிக்கடி இங்கு முதியோர்கள் உயிரிழப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் இறந்தவர்கள் உடலைப் பதப்படுத்தி, எலும்புகளை மருந்து தயாரிப்புக்காக வெளிநாட்டுக்குச் சட்டவிரோதமாக கடத்துவதாகப் புகார் எழுந்தது. இந்தக் காப்பகத்துக்கான உரிமம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்த நிலையில் புதுப்பிக்கப்படாமல் செயல்பட்டு வருகிறது.
இதுபோன்று பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் காப்பகத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். நேற்று (பிப்ரவரி 26) கோட்டாட்சியர் ராஜு தலைமையில் சமூகநலத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை ஆகிய துறைகளை சேர்ந்த 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தினர்.
ஆய்வுக்குப் பிறகு, முதியவர்களில் 40 சதவிகிதம் பேர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதால் அவர்களை மனநல மருத்துவமனைகளுக்கு அனுப்ப நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதல்கட்டமாகக் காப்பகத்தில் தங்கியுள்ள 255 பேரில் 86 பேர் மதுராந்தகம், தொழுப்பேடு, பரனூரில் உள்ள இல்லங்களுக்கு மாற்றப்படுகின்றனர் என்று மாவட்ட வருவாய் அதிகாரி நூர் முகமது தெரிவித்துள்ளார். மீதமுள்ளவர்களையும் மாற்று காப்பகத்துக்கு அனுப்பிய பிறகு இரு தினங்களில் பாலேஸ்வரம் காப்பகத்துக்குச் சீல் வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.�,