ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவரான அபு பக்கர் அல் பக்தாதி சிரியாவில் நடத்தப்பட்ட அமெரிக்க இராணுவப் படையின் அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி வருகிறது.
நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினமாக நம்பப்படும் தீபாவளித் திருநாளை புத்தாடை அணிந்து, பலகாரம் செய்து, பட்டாசுகள் வெடித்து நாம் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஒரு அரக்கன் கொலை செய்யப்பட்டதை நாம் இவ்வாறு கொண்டாடி மகிழும் போது நிஜ வாழ்க்கையில் பல்வேறு உயிர்களைக் காவு வாங்கிய பயங்கரவாதி அபு பக்கர் அல் பக்தாதி மரணமடைந்துவிட்டதாக வெளியிடப்பட்டுள்ள செய்தியை உலகமே கொண்டாடி வருகிறது.
பக்தாதி கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி குறித்து தங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளதாக இரானிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவரும், இரு இரானிய அதிகாரிகளும் சிரியாவிலிருந்து தெரிவித்துள்ளனர்.
இரானிய அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் ‘ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள நகரமான இட்லிப்-இல் இருந்து துருக்கியின் எல்லைப் பகுதி நோக்கி அவரது குடும்பத்தை அழைத்துச் செல்லும் வழியில் அவரது மெய்க்காப்பாளர் ஒருவருடன் கொலை செய்யப்பட்டார். இது குறித்து உளவுத் துறையிடம் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அபு பக்கர் அல் பக்தாதி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றதன் பின்னர், இந்த பயங்கரவாத அமைப்பிற்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆட்கள் சேர்க்கப்பட்டனர். 2014 ஆம் ஆண்டு மிகப் பெரிய தாக்குதல் நடத்தி ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இந்த அமைப்பு கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து ‘மிகப் பெரிய இஸ்லாமிய தேசம் உருவாகிவிட்டதாக’அல் பக்தாதி பேசும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதன் பின்னர் தலைமறைவாக இருந்த அவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால் சமீபத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இலங்கையில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்குப் பின்னர் அல் பக்தாதி வீடியோ ஒன்றில் தோன்றி பேசினார். 18 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் இலங்கையில் குண்டு வெடிப்பு நடத்தியதற்கான காரணம் குறித்து பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரைக் கண்டுபிடிக்க அமெரிக்கப் படைகள் சிரியாவில் தொடர் தேடுதல் வேட்டை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. மிகவும் ரகசியமாக நடந்த இந்த ஆபரேஷனில் அல் பக்தாதி தங்கியிருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வேறு எதையும் குறிப்பிடாமல், ‘மிகப்பெரிய விஷயம் ஒன்று நடந்துவிட்டது’ என்று மட்டும் குறிப்பிட்டு தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அல் பக்தாதியின் மரணம் குறித்துதான் அவர் இவ்வாறு குறிப்பால் உணர்த்துவதாக அனைவரும் கூறி வருகின்றனர்.
Something very big has just happened!
— Donald J. Trump (@realDonaldTrump) October 27, 2019
இந்நிலையில்தான் வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் ‘முக்கியமான தகவல்’ ஒன்றை வெளியிடப்போவதாக ஈரானும் இராக்கும் தெரிவித்துள்ளன.
�,”