20 ஆண்டுகளில் சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்குகள் எத்தனை?

public

கடந்த 20 ஆண்டுகளில் சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்குகள் எத்தனை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சஞ்சீவி குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ‘ராமநாதபுரத்தில் நீதிமணி மற்றும் ஆனந்த் ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இந்நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் ஓராண்டில் இரட்டிப்பாகும் என்று கூறினர். இதனால் பலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அதற்குக் காசோலை வழங்கப்பட்டது. இதனை ஒரு ஆண்டுக்குப் பிறகு வங்கியில் கொடுத்து பணம் வாங்கிக் கொள்ளலாம், என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்நிறுவனம் பலரை ஏமாற்றியதாக நீதிமணி மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் போலீசார், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஆனால் இந்த வழக்கை ராமநாதபுரம் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் ஆகியோர் சரியாக விசாரிக்கவில்லை. எனவே வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், நிதி நிறுவன மோசடி தொடர்பாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அசையா சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

சிபிஐ தரப்பில், அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினால் வேலைப்பளு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது, நீதிபதிகள் சிபிஐ அதிகாரிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய அரசு சார்பில் மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் சிபிஐக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து கடந்த 20 ஆண்டுகளில் சிபிஐக்கு எத்தனை வழக்குகள் மாற்றப்பட்டுள்ளன எத்தனை வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு எடுத்தது? எத்தனை வழக்குகளில் குற்றவாளிகள் தண்டனை பெற்றுள்ளனர்?

சிபிஐயில் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர். சிபிஐக்கு அதிக அளவில் ஆட்கள் தேர்வு செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது? என்று கேள்வி எழுப்பி இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.

மேலும் ராமநாதபுரம் நிதி நிறுவன மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை விரைவில் முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

**-பிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *