சரவணபவன் ஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் தவறவிட்ட ரூ.25 லட்சம் பணத்தை காவல் துறையிடம் ஒப்படைத்த ஊழியரை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள சரவணபவன் ஹோட்டல் ஒன்றில் கடந்த 31ஆம் தேதி ஒருவர் சாப்பிட வந்துள்ளார். அவர் சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது தான் கையில் வைத்திருந்த பையை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். இதனையடுத்து அந்த ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர் ரவி அந்தப் பையை எடுத்துப் பார்த்தபோது, அதில் ரூ.25 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, ஊழியர் அந்தப் பையை ஹோட்டல் மேலாளர் பாலுவிடம் கொடுத்தார். பணத்தை விட்டுச் சென்று ஒரு நாளாகியும் தவறவிட்டவர் வராத காரணத்தால், மேலாளர் பாலுவும் ரவியும் பணத்தை அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பணத்தை எடுத்துக்கொள்ளாமல் நேர்மையுடன் அதை ஒப்படைத்த மேலாளர் பாலு மற்றும் ஊழியர் ரவியையும் நேரில் அழைத்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டி வெகுமதிகளை வழங்கினார். இவர்களுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
�,