தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் தோல்வியடைந்துவிட்டாலும், பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருப்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
மின்வாரிய ஊழியர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2015 டிசம்பர் முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகள் இன்னும் வழங்கப்படவில்லை. இதற்காக அண்மையில் இரண்டு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையும் எவ்வித முடிவும் எட்டப்படாமலேயே முடிவடைந்தது. இதனால் நேற்று முதல் மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலைநிறுத்தம் குறித்து நேற்று (பிப்ரவரி 16) சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, தமிழக மின்வாரியத்தை சேர்ந்த ஊழியர்களில் சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் இன்றுமுதல் (நேற்று) வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். ஆனால் கிட்டத்தட்ட 95சதவிகித மின்வாரிய ஊழியர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று விளக்கம் அளித்தார்.
“எனவே சிஐடியு, பிஎம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தோல்வியடைந்துவிட்டது. இதற்காக நாங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் இல்லை என்று குறிப்பிட்ட அவர், இன்னும் இரண்டொரு நாட்களில் பணிச்சுமை பேச்சுவார்த்தை நடந்ததற்குப் பின்னால், அடுத்த வார இறுதிக்குள் முழுமையான செட்டில்மென்ட் முடிந்துவிடும் என்று ஏற்கனவே கூறியுள்ளேன். இப்போதும் நாங்கள் கவுரவம் பார்க்கவில்லை. அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தால் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். பிரச்னையை சுமூகமாக முடிப்பதற்கு அரசு தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார்.
ஆனால் நேற்று மாலை 7மணியளவில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் சென்னை சாந்தோம் பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. சில மணி நேரம் வரை நீடித்த இந்த மின்தடையால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் மின்தடை குறித்து யாரிடம் சொல்வது என்பதும் பொதுமக்களை சிரமத்தில் ஆழ்த்தியது.�,”