சுத்தமான எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் அமெரிக்காவிலிருந்து பெட்ரோலிய எரிவாயு இறக்குமதியை இந்தியா அதிகரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் தூய எரிசக்தி பயன்பாட்டுக்கு மக்களை ஊக்குவித்து வருகிறது. சமையலுக்கு மரக்கட்டை மற்றும் மாட்டுச்சாணம் உள்ளிட்டவற்றை எரிபொருளாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் காற்று மாசுபாட்டைத் தவிர்க்க திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (எல்பிஜி) உபயோகத்திற்கு மக்களை ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக அளித்து வருகிறது. இதனால் இந்தியாவின் சமையல் எரிவாயு எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்தியா அமெரிக்காவிடமிருந்து எரிபொருள் இறக்குமதியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி எண்ணெய் மற்றும் எரிவாயு ஆலோசனையகம் கூறுகையில் இந்தியாவின் எல்பிஜி தேவை 2018ஆம் ஆண்டில் 10 லட்சம் டன்கள் வரை அதிகரிக்கும். எல்பிஜி நுகர்வும் இந்த ஆண்டில் 8 சதவிகிதம் அதிகரிக்கும். கடந்த ஆண்டில் இந்தியாவின் எல்.பி.ஜி. நுகர்வு 23 மில்லியன் டன்னாக இருந்தது. இதில் பெருமளவு இறக்குமதி மூலம் தான் பெறப்பட்டுள்ளது. இந்தியாவின் எல்பிஜி இறக்குமதி கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது” என்று கூறியுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு இலவச சமையல் எரிவாவு இணைப்புத் திட்டத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டு வருவதே எரிவாயு இறக்குமதி அதிகரித்து வருவதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. தற்போது எரிவாயு இறக்குமதியில் இந்தியா ஜப்பானை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் சவூதி அரேபியா, கோதார், ஓமன் மற்றும் குவைத் போன்ற நாடுகளில் இருந்து தான் அதிகளவில் எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியா 2017ஆம் ஆண்டில் முதல்முறையாக அமெரிக்காவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்திருந்தது. “இந்தியாவின் எரிபொருள் தேவை அதிகரித்து வருவதால் அமெரிக்காவிடமிருந்து எல்பிஜி இறக்குமதி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இந்த ஆண்டிலோ அல்லது அடுத்த ஆண்டிலோ அமெரிக்காவிடமிருந்து எல்பிஜி இறக்குமதி அதிகரிக்கும்” என்று சிங்கப்பூரைச் சேர்ந்த ஃபேக்ட்ஸ் குளோபல் தெரிவித்துள்ளது. முன்னதாக அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில், “உலகின் இரண்டாவது பெரிய எரிபொருள் இறக்குமதி நாடான இந்தியா 60 சதவிகித ஏழை மக்களுக்கு (80 மில்லியன் குடும்பங்கள்) இலவச சமையல் எரிவாயு இணைப்பை வழங்கி வருகிறது” என்று கூறியிருந்தார்.�,”