அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறதா?

public

அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதா என அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராத நிலையில், பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற புதிய வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவிலும் 20 பேருக்கு புதிய தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாகக் கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் இங்கிலாந்திலிருந்து வந்த அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று, சர்வதேச விமான போக்குவரத்துக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதனிடையே திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த மார்ச் மாதம் சீனாவிலிருந்து வந்த பயணிகள் மட்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் பிற நாடுகளிலிருந்து வந்த பயணிகள் மூலமும் கொரோனா பரவியது. எனவே தற்போது பிரிட்டன் மட்டுமல்லாமல் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளையும் சோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், மற்றொரு ஊரடங்கு அறிவித்தால் மிக மோசமான நிலை ஏற்படும் எனவும் பிரிட்டனிலிருந்து வருபவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து வெளிநாடுகளிலிருந்து வரும் விமான பயணிகளையும் கண்டிப்பாக 14 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்த வேண்டும், 5ஆவது நாள் அவர்களுக்குப் பரிசோதனை செய்து அறிகுறி இல்லாவிட்டால் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதற்கு மத்திய அரசு தரப்பில் அனைத்து நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குப் பரிசோதனை நடத்துவதற்கான நடைமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

**-பிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *