சினிமா ஆசையில் 16 வருடங்களுக்கு முன் ஊரைவிட்டு சென்னைக்கு வந்தவர், கொரோனா ஊரடங்கால் உணவு கிடைக்காமல் குடும்பத்தைத் தேடி சென்ற சம்பவம் சாத்தூரில் நடந்துள்ளது.
சாத்தூர் நந்தவனப்பட்டி தெருவில் வசிக்கும் லட்சுமி சத்துணவு அமைப்பாளராக வேலை செய்கிறார். கணவரை இழந்த இவரின் மூன்றாவது மகன் பாண்டியராஜன் 16 வருடங்களுக்கு முன் காணாமல் போனார். மகனைக் கண்டுபிடித்து கொடுக்கும்படி அப்போது காவல் துறையில் புகார் கொடுத்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மகன் காணாமல் போன கவலையுடன் லட்சுமி அம்மாள் வாழ்ந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் 16 ஆண்டுகளாக வீட்டை மறந்து சென்னையில் வாழ்ந்த பாண்டியராஜன் சமீபத்தில் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.
இத்தனை ஆண்டுகள் குடும்பத்தினருடன் தொடர்பில்லாமல் இருந்தது பற்றி பாண்டியராஜனிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, “சினிமா ஆசையில் வீட்டில் சொல்லாமல் சென்னைக்குச் சென்றேன். ஆனால், சினிமா வாய்ப்பு கிடைக்காததால் கிடைத்த வேலையைச் செய்து வந்தேன். நல்ல நிலைக்கு வந்த பிறகு வீட்டுக்குச் செல்வோம் என்று வாழ்ந்ததில் காலம் ஓடிவிட்டது.
இந்தக் கொரோனா ஊரடங்கால் சென்னையில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. தங்க இடமில்லை, உணவு கிடைக்கவில்லை. உதவி செய்யவும் யாரும் இல்லை. வேறு வழி தெரியவில்லை. அதனால், என் அம்மாவைத் தேடி வந்துவிட்டேன். சென்னையிலிருந்து கால்நடையாகக் கிளம்பிய எனக்கு வழியில் விசாரித்த போலீஸ்காரர்கள் உணவு வழங்கினார்கள். பின்பு காய்கறி வண்டியில் ஏற்றி அனுப்பினார்கள். இப்படி பல வண்டிகள் மாறி மாறி ஊர் வந்து சேர்ந்தேன் என்று கூறியிருக்கிறார்.
**-ராஜ்**�,”