ஏர் இந்தியா விமான நிறுவனத்தைத் தனியார் மயமாக்குவதை வரவேற்றுள்ள அதன் விமான ஓட்டிகள் தங்களது சம்பள பாக்கியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுத் துறை விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா கடந்த சில ஆண்டுகளாகவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மேலும், கடுமையான வருவாய் இழப்பையும் தொடர்ந்து சந்தித்து வருகிறது. இதனால், கடந்த 2012ஆம் ஆண்டு தனது ஊழியர்களுக்கு சம்பளக்குறைப்பு செய்தது ஏர் இந்தியா. எனினும், வேறு வழியில்லாமல் ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். ஏர் இந்தியாவின் விமான ஓட்டிகள், இதர பணியாளர்கள் என, சுமார் 27,000 பேருக்கு ரூ.1,200 கோடி சம்பள பாக்கி உள்ளது. இதில் விமான ஓட்டிகளுக்கு மட்டும் ரூ.400 கோடி பாக்கி உள்ளது.
இந்நிலையில் ஒருகட்டத்தில் சம்பளம் கொடுப்பதையே ஏர் இந்தியா நிறுவனம் நிறுத்தியது. இதனால், ஊழியர்கள் பலமுறை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அஷ்வினி லொஹானி ஏர் இந்தியாவில் தலைவர் பொறுப்பேற்ற போது சம்பள பாக்கி அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக வழங்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் சம்பளம் கிடைத்தபாடில்லை. இந்நிலையில், ஏர் இந்தியாவைத் தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளதால் சம்பள பாக்கி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு, முதலில் எதிர்ப்பு தெரிவித்த ஏர் இந்தியா ஊழியர்கள் பின்னர், தனியாரிடம் மாறினால் சம்பள பிரச்சனை இருக்காது என்பதால், இத்திட்டத்தை வரவேற்றுள்ளனர். ஆனால், நிலுவையில் உள்ள சம்பளத்தை கொடுத்து விட்டு, ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார் மயமாக்குங்கள் என்று விமான ஓட்டிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சுமார் ரூ.52,000 கோடி கடன் சுமை உள்ளது. இதை முழுவதுமாக தனியார்மயமாக்க நிதி ஆயோக் அமைப்பானது மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.�,