தான் தயாரித்துள்ள முதல் படமே இன்னும் திரைக்கு வராத நிலையில், தனது அடுத்த படத்தைத் தொடங்கி கோலிவுட்டை புருவம் உயர்த்த வைத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
டிவியிலிருந்து புறப்பட்டுவந்து சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகர்களுள் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயனைக் குறிப்பிடலாம். வெறும் 12 படங்களில் மட்டுமே இதுவரை நடித்துள்ள சிவகார்த்திகேயன், கோலிவுட்டில் ஏற்படுத்தியுள்ள தாக்கமோ மிகப்பெரியது. கோலிவுட்டில் அதிக வசூல் புரியும் டாப் 5 முன்னணி நடிகர்களின் பட்டியலில் கிட்டத்தட்ட இணைந்துவிட்ட அவரை, இன்னும் ஆச்சரியம் விலகாமல் பார்ப்பவர்கள் பலர்.
இப்படியாக நடிப்புத் துறையில் தனது சினிமா கிராஃப் நெடுநெடுவென உயர்ந்துகொண்டே இருக்க, மறுபுறம் சத்தமே இல்லாமல் எஸ்.கே.புரொடக்ஷன் எனும் ஒரு படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அப்படத்தையும் வெளியிடத் தயாராகிவிட்டார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் அவரது முதல் தயாரிப்பான கனா படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தனது நிறுவனத்திலிருந்து இரண்டாவது படத்தையும் அவர் தயாரிக்க ஆயத்தமாகிவிட்டார். கார்த்திக் வேணுகோபால் இயக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் நடிகர் ரியோ. அவருக்கு ஜோடியாக ஷ்ரின் கஞ்வாலா நடிக்கிறார். அவர்களுடன் விக்னேஷ்காந்த், ராதா ரவி உள்ளிட்டோரும் நடிக்க யூகே செந்தில்குமார் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ஃபென்னி ஆலிவர் எடிட்டிங்கைக் கவனிக்கிறார். இப்படத்திற்கான பூஜை இன்று (நவம்பர் 29) நடந்தது.
விக்ரம் பிரபு நடித்த சத்ரியனில் துணை நடிகராக நடித்திருந்த ரியோ, சிவகார்த்திகேயனைப்போலவே டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். சன் மியூசிக் வாயிலாகவும், விஜய் டிவி வாயிலாகவும் மக்கள் மத்தியில் ஏற்கெனவே நன்கு அறிமுகமாகிவிட்ட அவர், இதில் கதாநாயகனாக நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
�,”