மத நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்பதை வலியுறுத்தும் காங்கிரஸைக் கண்டித்து பாஜகவும் நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
வன்கொடுமைத் தடைச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சமீபத்தில் தலித் அமைப்புகள் இணைந்து பாரத் பந்த் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏற்பட்ட வன்முறையில் 9 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மத நல்லிணக்கத்தைப் பேணவும், வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் வரும் 9ஆம் தேதி நாடு முழுதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, காங்கிரஸின் மாநிலத் தலைவர்களுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் எழுதியுள்ள கடிதத்தில், அனைத்து மாநில மற்றும் மாவட்ட தலைநகர்களில் உண்ணாவிரதம் மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
“சகோதரத்துவத்தைப் பாதுகாக்கவும் வன்முறையை ஒடுக்கவும் பாஜக ஆளும் மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கடினமான நேரங்களில் நாட்டை வழிநடத்த வேண்டியது காங்கிரஸுக்கு முக்கியமாகும். நாடு முழுவதும் அமைதியை நிலைநாட்டுவதை அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களும் உறுதி செய்ய வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காங்கிரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்போவதாக பாஜகவும் அறிவித்துள்ளது. டெல்லியில் நடந்த பாஜக நாடாளுமன்றக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஆனந்த்குமார், “பாஜக மக்களை இணைப்பதற்கான வேலையைச் செய்கிறது, ஆனால் காங்கிரஸ் மக்களைப் பிரிப்பதற்கான வேலையைச் செய்கிறது. காங்கிரஸ் பிரிவினைவாத, எதிர்மறையான அரசியல் செய்கிறது. கடந்த 23 நாட்களாக காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை முடக்கியது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ் முடக்கியதைக் கண்டித்து வரும் 12ஆம் தேதி பாஜக எம்பிக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவார்கள்” என்று கூறியுள்ளார்.�,