வாக்கு எண்ணிக்கையில் அதிமுக முன்னிலையில் இருந்துவந்த 2 தொகுதிகளில் சிதம்பரமும் ஒன்று. வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது தொடங்கி விசிக வேட்பாளர் திருமாவளவனும், அதிமுக வேட்பாளர் சந்திரசேகரும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகிறார்கள். இருப்பினும் சில ஆயிரம் ஓட்டுக்களே இருவருக்குமான வாக்கு வித்தியாசமாக இருந்துவருகிறது.
இந்த நிலையில் மதியத்துக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிப்பது தாமதப்படுத்தப்பட்டதாக விசிகவினர் குற்றம்சாட்டினர். விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் கவுதம சன்னா தனது முகநூல் பக்கத்தில், 8 சுற்றுகள் முடிந்த நிலையில் 5 சுற்றுக்களின் நிலவரத்தை மட்டும் அறிவிக்கிறார்கள் என்றும், யாரோ ஒருவரின் தொலைபேசி அழைப்புப்படி மாவட்ட ஆட்சியர் அறிவிப்புகளை வெளியிடுகிறார் என்றும், திருமாவளவன் முன்னிலை பெறுவதை அறிவிக்கத் தயங்குவதாகவும் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து தகவல்களை பதிவு செய்துவந்தார்.
இந்த நிலையில் மாலை 5.55 மணி நிலவரப்படி 4,941 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் முன்னிலையில் இருந்துவருகிறார் திருமாவளவன். 10 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் தொல் திருமாவளவன் 2,40,979 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் 2,38,717 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் தமிழகத்தில் தேனி தொகுதியைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பின்னடைவை சந்தித்துள்ளது.�,