கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்று நம்மை வாட்டி வந்த நிலையில், புதிதாக குரங்கு நோயானது சில வாரங்களுக்கு முன்பு பரவத் தொடங்கியது. ஆப்பிரிக்காவில் மட்டும் கண்டறியப்பட்ட இந்த குரங்கு அம்மை நோயானது ஐரோப்பிய மற்றும் பல மேற்கத்திய நாடுகளில் தற்போது பரவி உள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் குரங்கு அம்மை நோயின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக அளவில் தற்போது வரை 58 நாடுகளில் இந்த குரங்கு அம்மை நோய் பரவி உள்ளது.
இதுவரை உலகம் முழுவதும் 3417 பேர் இந்த குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பெருந்தொற்று போல இந்த நோயும் விஸ்வரூபம் எடுக்குமா என்று மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இந்த குரங்கு அம்மை நோய் உலகளவில் அவசர நிலையாக உருவெடுக்குமா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு சில நாட்களுக்கு முன்பு முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தியது. அப்போது குரங்கு அம்மை நோயானது அவசர நிலை அடைந்து விட்டதாகவும், இதற்கான விழிப்புணர்வு உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெளியிட்ட அறிக்கையில், “இந்த குரங்கு அம்மை நோயானது தற்போது 58 நாடுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரவி உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் ஒரு அவசர நிலைதான் ஆனால் கொரோனா சமூக பரவல் போன்று உருவெடுக்கும் அபாயம் இன்னும் வரவில்லை. இந்த நோய் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்தார்.
.