இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி ஒமிக்ரான் தொற்று 961 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 263 பேர் பாதிக்கப்பட்டு டெல்லி முதலிடத்திலும், 252 பேர் பாதிக்கப்பட்டு மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும் உள்ளது.
தேசிய தலைநகர் டெல்லி பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகிறது. கொரோனா இரண்டாம் அலையில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த தலைநகர், காற்று மாசுபாடு, தற்போது ஒமிக்ரான் என தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
இதுகுறித்து இன்று டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில்,” டெல்லியில் மொத்த கொரோனா பாதிப்புகளில் 46 சதவிகிதம் ஒமிக்ரான் வகையை சேர்ந்தவை. எந்தவொரு பயணம் மேற்கொள்ளாதவர்களுக்கும் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒமிக்ரான் படிப்படியாக சமூக பரவலாக மாறிவருகிறதை உணர்த்துகிறது. தற்போது டெல்லி மருத்துவமனைகளில் 200 கொரோனா நோயாளிகள் உள்ளனர். அவர்களில் 102 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள், 98 பேர் வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள்.
சர்வதேச விமான பயணங்கள் மூலமாகதான் டெல்லியில் தொற்று அதிகரிக்கிறது. கடந்த அலையின்போதும் சர்வதேச விமானங்கள் மூலம் தலைநகருக்கு வந்தவர்கள் மூலம்தான் தொற்று அதிகரித்தது” என்று கூறினார்.
இந்தியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரான் பரவல் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
**-வினிதா**
�,