விழுப்புரத்தில் பசியால் 5 வயது சிறுவன் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
விழுப்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சலவைத் தொழிலாளி சிவகுமார். இவர் விழுப்புரம் -சென்னை நெடுஞ்சாலையில் தள்ளுவண்டியில் துணிகளுக்கு இஸ்திரி போடும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 15ஆம் தேதி இவரது தள்ளுவண்டியில் போர்வையால் மூடிய நிலையில் ஐந்து வயது மதிக்கத்தக்கச் சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. முதலில் சிறுவன் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்து சிவகுமார் அவனை எழுப்பிய நிலையில் எந்த அசைவும் இல்லாததால் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு காவல் நிலைய போலீஸார் சிறுவனின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுவனின் பெற்றோர்கள் யார்? யாரேனும் கொலை செய்து சிறுவனைத் தள்ளு வண்டியில் போட்டுவிட்டுச் சென்றார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
உயிரிழந்த சிறுவன் அங்கன்வாடி மைய சீருடை அணிந்து இருந்ததால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையத்திற்கும் சிறுவனின் புகைப்படத்தை அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால் இதுவரை அச்சிறுவன் யார் என அடையாளம் காண முடியவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சூழலில் தற்போது சிறுவனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதில் இரண்டு நாட்களாகச் சிறுவனின் குடலில் உணவு மற்றும் தண்ணீர் இல்லை. அதனால் பசியால் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசிக்கொடுமையால் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அச்சிறுவன் யார் என கண்டறிய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
**-பிரியா**
�,