பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரைப் போலவே நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வருக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் திமுக மற்றும் அமமுக தரப்பிலிருந்து மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்துவந்த இவ்வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் நேற்று திமுக தரப்பில் முறையிடப்பட்டது. அதனை ஏற்று இவ்வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்று (ஜூலை 3) உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, பி.ஆர்.காவா அடங்கிய அமர்வின் முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக கொறடா சக்கரபாணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், “இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்துவருகிறது. ஏற்கனவே இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சிக்ரி ஓய்வுபெற்றதால் விசாரணை தடைபட்டுள்ளது. எனவே வழக்கின் முக்கியத்துவம் கருதி விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
மேலும் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய வழக்கையும் இந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதனை நிராகரித்த நீதிபதிகள், தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். விசாரணை தேதியானது பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதே அமர்வின் கீழ் இன்று சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு எதிராக 3 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.�,