ஹெச்.ராஜாவைக் கைது செய்து மனநலப் பரிசோதனைக்கு அனுப்பக் கோரிய புகாரில் நடவடிக்கை கோரிய வழக்கில் சென்னை அம்பத்தூர் காவல் ஆய்வாளர் விளக்கமளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் தமிழ்வேந்தன். இவர் கடந்த 7ஆம் தேதி பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது சென்னை காவல் ஆணையர் மற்றும் அம்பத்தூர் காவல் ஆய்வாளரிடம் புகார் ஒன்று அளித்திருந்தார் அதில், ‘ஹெச்.ராஜா தொடர்ந்து தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிவருகிறார். பொது அமைதிக்குக் கேடுவிளைவிக்கும் வகையில் கருத்துக் கூறி வருகிறார். மனநோயாளி போல் நடந்துகொள்ளும் ஹெச்.ராஜாவைக் கைது செய்து மனநல மருத்துவரிடம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்வேந்தனின் புகாரைப் பெற்ற காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், அவதூறாகப் பேசிவரும் ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யக் காவல் நிலையத்தில் அளித்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனநோயாளி போல பேசிவரும் ஹெச்.ராஜாவைக் கைது செய்து மனநல மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தக் காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று (மார்ச் 22) விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக சென்னை அம்பத்தூர் காவல் ஆய்வாளர் விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை மார்ச் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.�,