2017ஆம் ஆண்டில் இந்திய தொழில்நுட்பத் துறையில் புதிதாக 1000 தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இணையும் என்று நாஸ்காம் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: “சர்வதேச அளவில் ஸ்டார்ட் அப் துறையில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் தற்போது 5,200 தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. சுகாதாரத் தொழில்நுட்பம், நிதி தொழில்நுட்பம், இ-காமர்ஸ் போன்ற துறைகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மையங்களாக விளங்குகின்றன. அதேபோல 20 சதவிகித ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவின் இரண்டாம் தர மற்றும் மூன்றாம் தர நகரங்களில் இருந்து இயங்கிவருகின்றன. இந்திய ஸ்டார்ட் அப் துறை உலக அளவில் மிக வேகமாக வளர்ந்துவருகிறது.
2017ஆம் ஆண்டில் நிதி தொழில்நுட்பத் துறையில் 360 நிறுவனங்கள் இணையும். இவ்வாண்டின் முதல் அரையாண்டில் இத்துறையில் 200 மில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடப்படும் போது 135 சதவிகிதம் அதிகம். சுகாதாரத் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் துறையில் இந்த ஆண்டில் 320 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை இணையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 28 சதவிகிதம் கூடுதலாகும். இத்துறையில் முதல் அரையாண்டில் 160 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 129 சதவிகிதம் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்குப் புதுமையான ஆலோசனைகள், சரியான பார்வை, வழிநடத்துதல் தேவை என்று நாஸ்காம் தலைவர் ராமன் ராய் கூறுகிறார்.�,”