தேர்வு முறைகேடு: அவமதிப்பு வழக்கு வாபஸ் கிடையாது!

public

சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் திரும்ப பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய கைவிரல் ரேகை பிரிவில் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வில், ஒரு கேள்விக்கு மதிப்பெண் வழங்க வேண்டுமென்று கோரி அருணாச்சலம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, அந்த கேள்விக்கான சரியான விடையைக் கண்டுபிடிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டது. ஐஐடி பேராசிரியர் என்ற பெயரில் மூர்த்தி என்பவர் அளித்த அறிக்கையின்படி, அருணாச்சலத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை போலியானது என்றும், டி.மூர்த்தி என்ற பேராசிரியர் சென்னை ஐஐடியில் பணியாற்றவே இல்லை என்றும் மனுதாரர் அருணாச்சலம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரிய உறுப்பினர் செயலர் மீது உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 22) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கைக் கைவிட முடியாது என்று கூறி, அரசுத் தரப்பு கோரிக்கையை நிராகரித்தார் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம். வினா முறைகேடு தொடர்பாக காவல் ஆணையர் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதற்குக் கூடுதல் அவகாசம் வழங்கினார். இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 6ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

இதற்கிடையில், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பின் கீழ் மோசடி வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மூர்த்தி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனையும் நீதிபதி சுப்பிரமணியம் நிராகரித்தார்.

**நிபந்தனை ஜாமீன்**

கை விரல் ரேகை பிரிவு சப்இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு முறைகேடு தொடர்பாக, ஜி.வி.குமார் என்பவரை கடந்த 1ஆம் தேதியன்று கைது செய்தனர் போலீசார். இது தொடர்பாகச் சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஐஜி செந்தாமரைக்கண்ணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆலோசகரான ஜி.வி.குமார் தான் ஐஐடி பேராசிரியர் என்று டி.மூர்த்தியை அதிகாரிகளிடம் அறிமுகம் செய்தாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜி.வி.குமாரும், டி.மூர்த்தியும் சேர்ந்து சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தை ஏமாற்றியதாகக் கூறியிருந்தார் செந்தாமரைக்கண்ணன்.

தனக்கு ஜாமீன் வழங்குமாறு கோரி ஜி.வி.குமார் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தநிலையில், அவரது சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட்டது. இன்று (ஏப்ரல் 22) இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரானார் வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணகுமார். சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு எந்த அறிக்கையையும் மனுதரார் தரவில்லை எனவும், வினாவிற்கான விடை கோரியபோது அது குறித்து வேறு ஒரு நபருக்கு பரிந்துரை செய்ததாகவும் தெரிவித்தார். இந்த வழக்கில் ஜி.வி.குமாருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டபிறகு, சீருடைப் பணியாளர் தேர்வாணைய விடை முறைகேடு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஜி.வி.குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி ஆனந்த வெங்கடேசன். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் விசாரணை அதிகாரி முன் காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று தனது உத்தரவில் அவர் குறிப்பிட்டார்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *