துணைவேந்தர் : ஆளுநர் செயலருக்கு நீதிமன்றம் உத்தரவு!

public

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக ஆளுநரின் செயலர் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று ஜூலை 12ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே 27ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செல்லதுரை என்பவர் நியமிக்கப்பட்டார். ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்கு ஒருவர் 10 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்திருக்க வேண்டும்; சிறந்த கல்விப்புல பின்னணி கொண்டிருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள செல்லதுரைக்குப் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம் கிடையாது. அதனால், அவரை துணைவேந்தராக ரத்து செய்ய வேண்டும் என்று அப்போதே காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்களிடையே எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில், மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த லயோனல் அந்தோணிராஜ் என்பவர் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளராக உள்ளார். இவர் ஜூலை 11ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தார். அதில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பாதுகாப்பு குழுவின் கன்வீனராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் சீனிவாசன் என்பவரை ஒரு கும்பல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் புதுக்கோட்டை நாகமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தத் தாக்குதல் தொடர்பாக விசாரித்த போலீஸார், தற்போது காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள செல்லதுரை உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. அதுமட்டுமில்லாமல், துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள செல்லதுரைக்குப் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் கிடையாது. அதனால், குற்ற வழக்கு பின்னணியும், பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் இல்லாத செல்லதுரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் அவர் பல்கலைக்கழகத்தில் புதிய பணியிடங்களை நிரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு, இந்த வழக்கில் தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தரான தமிழக ஆளுநரை எதிர் மனுதாரராக சேர்த்து மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து, நேற்று ஜூலை 12ஆம் தேதி மனுதாரர் லயோனல் அந்தோனிராஜ், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செல்லதுரை நியமிக்கப்பட்டதை எதிர்த்தும் அதில் தமிழக ஆளுநரை எதிர் மனுதாரராக சேர்த்தும் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக செல்லதுரை விதிமுறைகளின்படி தான் நியமிக்கப்பட்டாரா என்பதை நிரூபிக்க வேண்டும். அதனால், இந்த வழக்கில் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் பெற்ற ஆளுநர் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளதால் தமிழக ஆளுநரின் செயலர், பல்கலைக்கழகப் பதிவாளர் ஆகியோர் செல்லதுரை காரமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதற்கான ஆவணங்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை தமிழக ஆளுநரின் செயலருக்கு உத்தரவிட்டிருப்பது பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் வெளிப்படை தன்மை வேண்டும் என்பதையே காட்டுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *