நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 75வது ஆண்டு நிகழ்வில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தமிழில் பேசியதற்கு மற்ற மாநில எம்.பி-க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பு ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இருந்தபோது, நடைபெற்ற போராட்டங்களில், 1942 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்க போராட்டமும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இதன் 75வது ஆண்டு விழாவை நாடாளுமன்றத்தில் இன்று( ஆகஸ்ட்-9) கொண்டாடப்பட்டது. நிகழ்வில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் உரையாற்றினர்.
அதிமுக அம்மா அணி சார்பில் மக்களவை துணை சபாநாயகரும், எம்.பியுமான தம்பிதுரை பேசும்போது, தமிழில்,’ வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு போராடினர். சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மிகவும் மகத்தானது’ என்று பேசினார். பேசும்போதே தம்பிதுரை தமிழில் பேசியதற்கு மற்ற மாநில எம்.பி-க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு தம்பிதுரை, தான் இதற்கு ஆங்கிலத்தில் விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பவே தன்னுடைய உரையை ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.
பேசி முடித்தபிறகு அவர், ‘நாடாளுமன்றத்தில் ஆங்கிலம், இந்தி தவிர எந்த மொழியில் பேசவும் அனுமதி வாங்க வேண்டியுள்ளது, தமிழ், வங்காளம், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்’ என்று தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மேசையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.நாடாளுமன்றத்தில் தம்பிதுரை தமிழில் பேசியதற்கு மற்ற மாநில எம்.பி-க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் சிறிது நேரம் சர்ச்சை ஏற்பட்டது.�,