சண்டே ஸ்பெஷல்: தேசிய ஹைட்ரேஷன் தினம் (National Hydration Day)
இன்று தேசிய ஹைட்ரேஷன் தினம். உடலுக்குத் தண்ணீரின் தேவையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம்.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது, உடலில் அதற்கேற்றவாறு நீர் இருக்க வேண்டியது கட்டாயம். உடல் அதிகமாக வெப்பமாகாமல் இருக்கவும், உடலில் நீரின் இருப்பு குறையாமல் (dehydration) இருக்கவும் தொடர்ந்து தண்ணீர் குடிக்க வேண்டியது கட்டாயம். நம் உடலில் நடக்கும் அனைத்து உயிர் வேதியியல் செயல்பாடுகளுக்கும் (biochemical reactions), தண்ணீர்தான் அடிப்படை. தண்ணீர் இல்லாமல் நம் உடலால் இயங்கவே முடியாது. தண்ணீர் குடிப்பதன் அத்தியாவசியத்தை உணர்த்தவே இந்நாள் கொண்டாடப்படுகிறது.
நீரை உட்கொள்ளுதல், அதாவது ஹைட்ரேஷன் என்பது, தண்ணீர் குடிப்பதை மட்டும் குறிக்கவில்லை. நம் உடலுக்குள் செல்லும் அனைத்து நீரும் இதில் அடங்கும். பழங்கள் காய்கறிகள் என்று நாம் உண்ணும் உணவிலுள்ள நீரும் இதில் சேரும். குறைவான கொழுப்புள்ள பாலில் 90% தண்ணீர்தான், தக்காளியில் 95% தண்ணீர்தான். இவைதவிர, வெள்ளரிக்காய், தர்பூசணி, இளநீர், கஞ்சி என்று பல உணவுகளைச் சொல்லலாம். இப்படி அனைத்து உணவுகளில் இருக்கும் நீரும் நாம் ஹைட்ரேடட்டாக இருக்க உதவுகிறது.
நாம் எதைச் சாப்பிட்டாலும், அது செரிமானமாவதற்குத் தண்ணீர் அத்தியாவசியம். நம் உடலில் 50-60% தண்ணீர்தான். நம் ரத்தத்தில் 93% தண்ணீர்; தசைகளில் 73%, கொழுப்பில் 10% தண்ணீர்தான். நம் உடலில் இருக்கும் இந்தத் தண்ணீர் தொடர்ந்து சுழன்றுகொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 3-4% தண்ணீர் புதிய தண்ணீராக மாறும் (Fresh Water). சராசரி நபரின் உடலில் 30 முதல் 60 லிட்டர் நீர் வரை இருக்கும். ஒரு நாளில், 2.5-3 லிட்டர் நீர் வரை நாம் நம் செய்யும் வேலைகள் மூலம் இழக்கிறோம். வெயில் காலத்திலும், உடற்பயிற்சி செய்யும்போதும் இந்த இழப்பு அதிகமாகிறது.
ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்வது அனைவருக்கும் பொருந்தாது. ஒவ்வொரு தனிநபரின் உடலுக்கும், வேலைக்கும் ஏற்ப நாம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
நம் உடலில் தண்ணீர் செய்யும் மிக முக்கியமான வேலைகள்:
– உடலின் வெப்பத்தைச் சமநிலையில் வைக்க உதவுகிறது.
– மூட்டுகளில் போதுமான lubrication இருக்குமாறு பார்த்துக்கொள்கிறது.
– முதுகெலும்பு மற்றும் இதர நரம்புகளைப் பாதுகாக்கிறது.
– சிறுநீர் தொடர்பான கோளாறுகளும் செரிமானக் கோளாறுகளும் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது.
நமக்கு தாகம் எடுக்கிறது என்றாலே, நம் உடலில் 1% தண்ணீர் குறைந்துவிட்டது என்று அர்த்தம். அதனால், தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், தண்ணீரைக் குடித்துக்கொண்டே இருங்கள்!
**-ஆசிஃபா**
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சோனியா கோரிக்கை… ஸ்டாலின் நிராகரிப்பு!](https://minnambalam.com/k/2019/06/22/70)**
**[மரம்வெட்டி என்று சொன்னால் வெட்டுவோம்: சீறிய ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/06/23/25)**
**[பதவியை ராஜினாமா செய்யவில்லை: வெள்ளக்கோயில் சாமிநாதன்](https://minnambalam.com/k/2019/06/23/13)**
**[அந்த ஜாம்பவான் போகட்டும்: தங்கத்தை சாடும் தினகரன்](https://minnambalam.com/k/2019/06/22/64)**
**[பாஜகவைத் தொடர்ந்து எதிர்ப்பேன்: தினகரன்](https://minnambalam.com/k/2019/06/22/23)**
�,”