வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்துவந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் நேற்று (ஜனவரி 18) தன்னுடைய போராட்டத்தை வாபஸ் பெற்றார்.
ஆண்டாள் குறித்து வைரமுத்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதைக் கண்டித்து இந்து அமைப்புக்கள் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன. வைரமுத்து மீது விருதுநகர் மற்றும் சென்னையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வைரமுத்துவுக்கு எதிராக, ‘வாழ்க இந்து நீதி தர்மம்’ எனும் தலைப்பில் ஜீயர்கள், மடாதிபதிகள், இந்து அமைப்புகள் ஆகியோர் சார்பாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஜனவரி 15ஆம் தேதி போராட்டம் நடந்தது.
அதில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், ‘வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதிக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கூறியிருந்தார். அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் அறிவித்தார். வைரமுத்து மன்னிப்பு கேட்காத நிலையில் அறிவித்தபடி ஜனவரி 17ஆம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றும் (ஜனவரி 18) தொடர்ந்தது. இந்து அறநிலையத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு நபர்கள் போராட்டத்தை முடித்துக்கொள்ள சொல்லி வற்புறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், வைரமுத்து மன்னிப்பு கேட்காத நிலையில் இரண்டாம் நாளான நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அதிகாரிகளின் வலியுறுத்தலுக்கு இணங்கி போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார். மேலும், வைரமுத்து வரும் பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க தவறினால் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் ஜீயர் கூறியுள்ளார்.�,