ஹைதராபாத்தில் ஓட்டுநர் உரிமம் பெறாமல் சிறுவர்களை கார், இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதித்த பெற்றோருக்கு மூன்று நாள்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஹைதராபாத் நகரில் கடந்த சில மாதங்களாக ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் இயக்குவோர் மீது போலீஸார் கடும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து துணை ஆணையர் ஏ.வி.ரங்கநாத், “ஹைதராபாத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்து வந்தன. அதிலும் குறிப்பாக 14 வயது முதல் 16 வரையிலான சிறுவர்கள் பைக் மற்றும் கார்களை உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டி விபத்துகளில் சிக்குகிறார்கள். ஜனவரி மாதத்தில் மட்டும் ஐந்து சிறுவர்கள் விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க முடியாது. இதையடுத்து, இவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு அனுமதித்த பெற்றோர்களைத் தண்டித்தால் விபத்துகள் குறையும் என திட்டமிட்டோம். இதையடுத்து உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய 69 சிறுவர்கள் சிக்கினார்கள்.
இவர்களின் பெற்றோர்களுக்கு உரிய அபராதம் விதிப்பதற்குப் பதிலாக, கவனக்குறைவாக வாகனத்தைக் கையாளுதல், உரிமம் இல்லாதவர்கள் வாகனத்தைக் கையாள அனுமதித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். இவர்களுக்கு நீதிபதி ஒரு நாள் முதல் மூன்று நாள்கள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதித்தார். இதற்கு முன் கடந்த இரண்டாண்டுகளாகப் பெற்றோருக்கு அபராதம் விதித்தும் எந்தவிதமான பலனும் இல்லை என்பதால், சிறை தண்டனை விதித்தோம். இதன்படி கடந்த ஒரு மாதத்தில் 69 சிறுவர்களின் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டு, சிறுவர் நலக் காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்
மேலும், “எங்களின் இந்த நடவடிக்கைக்குப் பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெற்றோரை கைது செய்வதைப் பார்க்கும் பிள்ளைகள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை எடுக்க அஞ்சுகிறார்கள். இதனால், கடந்த ஒரு மாதமாக விபத்துகள் குறைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.�,