பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபுக்கு, ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நாவஸ் ஷெரிஃப் மீது, ஊழல் முறையில் லண்டனில் அவன்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதாக பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதவிர அவர்மீது நான்கு ஊழல் வழக்குகளும் உள்ளன.
பனாமா ஆவணம் தொடர்பான ஊழல் வழக்கின் அடிப்படையில் வெளியான தீர்ப்பில் நவாஷ் ஷெரிஃபைத் தகுதிநீக்கம் செய்து கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் நவாஷ் ஷெரிஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குகள் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் லண்டனில் ஊழல் முறையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியது தொடர்பான வழக்குக்கு நேற்று (ஜூலை 6) இஸ்லாமாபாத்தில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆனால், தீர்ப்பை ஒருவாரம் தள்ளி அறிவிக்குமாறு நவாஸ் ஷெரிஃப் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். லண்டனில் தனது மகள் மர்யமுடன் வசித்துவரும் இவர், லண்டனில் சிகிச்சை பெற்று வரும் தனது மனைவி குல்சூமின் உடல் நிலையைக் கருத்தில்கொண்டு, தீர்ப்பைத் தள்ளி வைக்குமாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், 80 லட்சம் பவுண்ட் அபராதத்துடன், நவாஸ் ஷெரிஃபுக்கு 10 ஆண்டுகள் சிறையும், மகள் மர்யத்துக்கு 7 ஆண்டுகள் சிறையும், 2 மில்லியன் பவுண்ட் அபராதமும் விதித்துள்ளது.
நவாஸ் மருமகன் சப்தார், இவர்களின் மகன்கள் ஹசன், ஹூசைன் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். வரும் 25ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்தத் தீர்ப்பினால், மகள் மர்யம், மருமகன் சப்தார் ஆகியோர் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.�,