கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார் நடிகை சாயிஷா.
கௌதம் கார்த்திக்குடன் கூட்டணி அமைத்த சந்தோஷுக்கு, ‘ஹர ஹர மகாதேவி’ நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததனால், அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் மீண்டும் கூட்டணி அமைத்தார். அவரின் இரண்டாம் படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கான வேலைகள் ஒருபுறம் நடைபெற்றுவந்தபோதே அதே நிறுவனத்துடன் ஆர்யா, சாயிஷாவுடன் களமிறங்கினார் சந்தோஷ்.
இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் வெளியீட்டுக்கான வேலைகளில் ஈடுபட்டதனால், ஆர்யாவின் கஜினிகாந்த் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பை முடிக்காமல் இருந்தார் சந்தோஷ். தற்போது அதையும் முடித்துள்ளார்.
ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் சாயிஷா இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “கஜினிகாந்த்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இது எனக்கு மிகவும் பிடித்த முக்கியமான கூட்டணி. அற்புதமான இயக்குநர் சந்தோஷுக்கு நன்றி. ஆர்யா, நீங்கள் ஆச்சரியமானவர். எனக்குள் இருந்த நடிப்பையும் வெளிப்படுத்தச் செய்திருக்கிறீர்கள். படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சாருக்கு மிகப் பெரிய நன்றி. படத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருக்க எனக்குப் பொறுமை இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து படத்தின் இறுதிக் கட்டப் பணிகளை விரைவில் துவங்க உள்ளனர்.
�,”