கர்நாடக முதல்வராகப் பதவியேற்றுள்ள குமாரசாமி அரசின் செலவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார். அதன் ஒரு பகுதியாக அமைச்சர்களுக்குப் புதிய கார்கள் கிடையாது என்று அவர் அறிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வராகக் கடந்த மே 23ஆம் தேதி குமாரசாமி பதவியேற்றார். தனது தேர்தல் அறிக்கையில் விவசாயக் கடனை முழுவதுமாக ரத்து செய்வதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கூறியிருந்தது. எனவே, விவசாயக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் இருந்து குமாரசாமிக்குக் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. விவசாயக் கடன் தொடர்பாக 15 நாட்களில் முடிவு எடுப்பதாகக் கடந்த 30ஆம் தேதி அவர் தெரிவித்திருந்தார்.
2018-19ஆம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டின் மதிப்பு ரூ.2,09,191 கோடி ஆகும். விவசாயக் கடனை ரத்து செய்ய பட்ஜெட்டின் நான்கில் ஒரு பகுதி செலவாகும். என்பதால் 53 ஆயிரம் கோடி மதிப்பிலான விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது எப்படி என்பது குறித்து அவரது தலைமையிலான அரசு யோசித்து வருகிறது. எனவே, அரசு நிர்வாகத்தின் வீண் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையிலும் குமாரசாமி ஈடுபட்டுவருகிறார். சில தினங்களுக்கு முன்பு மாநில அரசுத் துறைகளுக்கு அவர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார். நிர்வாகச் செலவினங்களைக் குறைக்குமாறும், புதிய வாகனங்கள் வாங்குவதைத் தவிக்குமாறும் அதில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 4) நடிகர் கமலுடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த குமாரசாமி, “தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்கும்படி ஏற்கெனவே தலைமை செயலாளரிடம் அறிவுறுத்தியுள்ளேன். சிக்கன நடவடிக்கையின் ஒருபகுதியாக, புதிய பதவிக்கு வரும் அமைச்சர்கள் வாரிய தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் யாருக்கும் புதிய கார்கள் வாங்கக் கூடாது. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள கார்களைத் தான் பயன்படுத்த வேண்டும். இதுபோலவே, சட்டமன்றத்தில் உள்ள தங்களின் அறைகளைப் புனரமைக்க விரும்பும் அமைச்சர்களும் அதிகாரிகளும் தங்களின் முடிவை இந்த ஆண்டு நிறுத்தி வைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.�,