மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒமிக்ரான் பாதிப்பு இரட்டிப்பாகிறது என்று உலக சுகாதாரம் நிறுவனம் அதிர்ச்சியான தகவலைத் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் உருமாறிய ஒமிக்ரான் தொற்று தடுப்பூசி அதிகமாகப் போடப்பட்ட பகுதிகளிலும் வேகமாக பரவி வருகிறது. சமீப நாட்களாக இந்தியா உட்பட சில நாடுகளில் தொற்று பரவல் குறைந்து வந்து கொண்டிருந்த நிலையில், ஒமிக்ரான் பரவல் ஏற்பட்டு மீண்டும் நிலைமை மோசமாக ஆரம்பித்துள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஒமிக்ரான் தொற்றினால் மூன்றாவது அலை ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இருப்பினும், ஒமிக்ரான் வைரஸ் பற்றிய தகவல்கள் எதுவும் முழுமையாக தெரியவில்லை.
இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்டா வகை வைரஸை விட ஒமிக்ரான் அதிகமாகப் பரவுகிறது என்றும் தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு தன்மையிலிருந்து தப்பிக்கிறது என்றும் முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுவரை 89 நாடுகளில் ஒமிக்ரான் தொற்று பரவியுள்ளது. டெல்டாவை விட ஒமிக்ரான் கணிசமான வளர்ச்சியைக் கொண்டுள்ளதால், சமூகப் பரவலாக மாறும்போது பாதிப்பில் டெல்டாவை மிஞ்சும் என்பதற்கு உறுதியான சான்று உள்ளது. ஒவ்வொரு 1.5 முதல் 3 நாட்களுக்கு ஒருமுறை ஒமிக்ரான் பாதிப்பு இரட்டிப்பாகிறது. அதிகளவு மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும் நாடுகளிலேயே ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**தமிழ்நாடு**
நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஒமிக்ரான் தொற்று காரணமாக முற்றிலுமாக மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு இடையேயான போக்குவரத்தை தடை செய்ய முடியாது. ஆனால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஹை ரிஸ்க் நாடுகளிலிருந்து வருபவர்களை விட பிற நாடுகளில் இருந்து வருபவர்களுக்குதான் ஒமிக்ரான் அறிகுறிகள் அதிகம் காணப்படுகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் எஸ் ஜீன் டிராப் வகை பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 28இல் இருந்து 33 ஆக உயர்ந்துள்ளது. எல்லா வகையிலும் கூடுதல் கவனத்தோடு அரசு செயல்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் கவனமாக இருப்பதுடன் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று கூறினார்.
**-வினிதா**
�,