வட தமிழகத்தை அச்சுறுத்தி வந்த வங்கக் கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை கரையைக் கடந்தது. புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடந்த நிவர் புயல் வலுவிழந்து வடக்கு மற்றும் வடமேற்காக நகர்ந்து சென்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த புயல்களின்போது ஏற்பட்ட பாதிப்புகளை விட குறைவான பாதிப்புகளே இருந்ததாகவும், மழை அதிகம் பெய்ததாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டனர். புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விழுந்த மரங்களை அரசுப் பணியாளர்கள் விடிய விடிய அப்புறப்படுத்தினர். பாதிப்பு நிலவரங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கையும் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் நிவர் புயல் பாதிப்புகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (நவம்பர் 26) தொலைபேசியில் கேட்டறிந்தார். அதுபோலவே, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடமும் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் புயல் பாதிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இதுகுறித்து இரு மாநில முதல்வர்களிடம் பேசியதுடன், மத்திய அரசு மாநிலத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் என்று உறுதி அளித்துள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெள்ள பாதிப்பு பகுதிகளில் பணியில் உள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்தார்.
இதனிடையே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பகுதிகளை ஆய்வு செய்ய சென்னையிலிருந்து கார் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைந்துள்ளார்.
**எழில்**�,