மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று நந்திகிராம் சம்பவம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நான்கு நாட்களுக்கு முன்பு, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்த மம்தா பானர்ஜி, அங்குள்ள ஒரு கோயிலுக்கு சென்றார். தரிசனத்தை முடித்துவிட்டு, காருக்குள் ஏற சென்றபோது, நான்கைந்து பேர் தன்னை தள்ளிவிட்டதால், காலிலும், தோளிலும் காயம் ஏற்பட்டதாகவும், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் மம்தா பானர்ஜி கூறினார். இதையடுத்து கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று முன் தினம் வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக, மேற்குவங்க மாநிலத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு பார்வையாளர் அஜய் நாயக் மற்றும் சிறப்பு போலீஸ் பார்வையாளர் விவேக் துபே ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
தற்போது அந்தக் குழு அளித்த அறிக்கையில், ”இந்த சம்பவம் திடீரென ஏற்பட்டதால் மம்தா பானர்ஜி காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட காயம் விபத்தினாலே தவிர, திட்டமிட்ட தாக்குதல் அல்ல. மேலும், சம்பவம் நடந்த இடத்தில் அருகே இருந்த எந்த சிசிடிவியிலும், இதுதொடர்பான தெளிவான காட்சிகள் இல்லை” என தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக நடக்கும் வாக்குப்பதிவுக்காக முதல்வர் மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்யும்போது தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யுமாறு அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
**வினிதா**
�,