ஆஸ்கர் விழாவில் நடிகர் வில் ஸ்மித் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தது ஆஸ்கர் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இன்று காலை முதல் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று காலை ஹாலிவுட் டால்பி திரையரங்கில் இவ்விழா நடைபெற்றது.
அப்போது சிறந்த ஆவண படத்திற்கான விருதை வழங்குவதற்காக கிறிஸ் ராக் என்ற நகைச்சுவை நடிகர் மேடை ஏறினார். இதனிடையே கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டு அவரும் அழைக்கப்பட்டிருந்தார். விழாவுக்கு வில் ஸ்மித் தனது மனைவி ஜடா பிங்க்கெட் உடன் வந்திருந்தார்.
அப்போது மேடையிலிருந்த கிறிஸ் ராக், மொட்டை அடித்து இருந்த ஜடா பிங்க்கெட் குறித்து நகைச்சுவைக்காக கிண்டல் செய்தார்.
ஜி.ஐ. ஜேன் 2 படத்தில் நடிகை தனது தலையை மொட்டை அடித்தபடி நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு ஜடா பிங்க்கெட்டை கிண்டல் செய்தார். இது அங்கிருந்த பார்வையாளர்கள் இடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த நகைச்சுவையை ஜடா பிங்க்கெட் ரசிக்கவில்லை என்பதுபோல் உணர்த்தியது. இதைப்பார்த்த வில் ஸ்மித் திடீரென்று மேடைக்கு ஏறி சென்றார். அவர் வருவதைப் பார்த்து, தன்னை பாராட்டத்தான் வருகிறார் என்று நினைத்துக்கொண்டிருந்த கிறிஸ் ராக் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு மீண்டும் தன் இருக்கையில் வந்து அமர்ந்தார் வில் ஸ்மித்.
இந்த நிகழ்வு அங்கு வந்திருந்த பிரபலங்கள் மத்தியில் மட்டுமின்றி ஆஸ்கர் விழாவை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
VIA JAPANESE TELEVISION: The uncensored exchange between Will Smith and Chris Rock pic.twitter.com/j0Z184ZyXa
— Timothy Burke (@bubbaprog) March 28, 2022
அதோடு இருக்கையில் வந்து அமர்ந்த வில் ஸ்மித், ’உன் வாயால் என் மனைவியைப் பற்றி பேசாதே’ என்று உரத்த குரலில் கூறினார். இது தொடர்பான வீடியோ காட்சி இணையங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே கிங் ரிச்சர்ட் படத்திற்காக ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்ட வில் ஸ்மித், ஆஸ்கர் அகாடமியிடமும் அங்கு வந்திருந்த பிரபலங்கள் மத்தியிலும் மன்னிப்பு கேட்டார்.
50 வயதாகும் ஜடா பிங்க்கெட் அலோபீசியா என்ற முடி உதிர்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் இதுபற்றி அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பல நேர்காணல்களில் தனக்கு முடி உதிர்வு நோய் இருப்பதைப் பற்றிக் கூறிய அவர் இதன் காரணமாக மொட்டை அடித்துக்கொள்ள கட்டாயம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தசூழலில் வில் ஸ்மித் கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “சபாஷ்…. சரியான தண்டனை!… வில் ஸ்மித்தின் செயல் மிகவும் சரியானது. கிறிஸ் ராக்கின் செயலுக்கு உடனடியாக சரியான தண்டனை கொடுத்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல…. ஜடாவை தாம் கிண்டல் செய்ததில் உள்நோக்கமில்லை என்று கிறிஸ்ராக் விளக்கமளித்த போது அதை ஸ்மித் ரசிக்கவில்லை. அப்போதும் கூட என் மனைவியின் பெயரை உச்சரிக்கக்கூட உனக்குத் தகுதியில்லை என்று பொங்கியிருக்கிறார். அவர் உண்மையான கதாநாயகன்.
இந்த நிகழ்வு சொல்லியிருப்பது இரண்டு உண்மைகளை…
1. ஒருவரின் ஊனத்தை,(body shaming) குறையை நகைச்சுவைக்கான கருப்பொருளாக்காதீர்கள்.
2. மனைவியையும், அவரது உணர்வையும் மதித்தால் உலகம் உங்களை மதிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
**-பிரியா**