மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் ஆகிய மக்கள் பிரதிநிதிகளை கொரோனாவுக்கு பலி கொடுத்தது தமிழகம்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதனிடையே ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு தமிழகம் வழக்கமான நிலைக்கு திரும்பியதால் அரசியல் கட்சிகள் தங்களது பணிகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுத்து வந்தார்.
அவருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, பரிசோதனை செய்துகொண்டிருக்கிறார். அதில், தொற்று உறுதியானதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
“கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமாக உள்ளேன்” என்று கே.பாலகிருஷ்ணன் தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று (அக்டோபர் 12) தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனை சென்றிருக்கிறார் என்ற செய்தி அறிந்தோம். விரைவில் உடல்நலம் பெற்று, மீண்டும் அவர் பொதுப் பணியில் ஈடுபட வேண்டுமென விழைகிறோம்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
**எழில்**�,