கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இத்தனை நாட்களாகச் செய்தியாளர்களைச் சந்திக்காதது ஏன் என்ற கேள்விக்கும் விளக்கம் அளித்தார்.
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தினசரி மாலை சுகாதாரத் துறை அறிவிப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர் தமிழக மக்கள். இன்று எத்தனை பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது, எண்ணிக்கை எவ்வளவு அதிகரித்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள விரும்புகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடங்கிய காலத்தில் தினசரி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்து வந்தார். அமைச்சரின் செயல்பாடுகள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அவரை புகழ்ந்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பரவின. குறிப்பாக இது விஜயபாஸ்கர் மாநிலம் என்ற வகையில் ஒரு மீம் இணையதளத்தில் பரவியது.
இந்தத் தகவல் கட்சித் தலைமைக்குச் செல்லவே அரசியல் காரணங்களுக்காக விஜயபாஸ்கர் ஓரங்கட்டப்பட்டார் என்று செய்திகள் பரவின. இதையடுத்து தினசரி சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவரது பேச்சும் பொது மக்களைக் கவர்ந்தது.
இதனிடையே அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்குப் பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மருந்து கையிருப்பு, மருத்துவ உபகரணங்கள் ஆகியவை போதிய அளவில் இருப்பதாகச் சுட்டிக்காட்டிப் பேசினார்.
இதையடுத்து 15 நாட்களாக ஏன் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த அவர், நான் நேற்று முன்தினம்கூட செய்தியாளர்களைச் சந்தித்தேன். அமைச்சர் என்ற முறையில் பல்வேறு மருத்துவமனைகளில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறேன். அதனால்தான் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லையே தவிர நீங்கள் எதுவும் கற்பனை செய்துகொள்ள வேண்டாம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
**-கவிபிரியா**�,”