டிரம்ப் தூண்டுதல்: தாக்கப்பட்ட அமெரிக்க நாடாளுமன்றம்!

Published On:

| By Balaji

அமெரிக்க தேர்தலில் தன் தோல்வியை இன்னமும் ஏற்றுக் கொள்ளாத அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதை உலகமே அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடம், ‘கேபிடல் (capitol) என்று அழைக்கப்படுகிறது. இங்கே அமெரிக்காவின் புதிய அதிபரான ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக செனட், காங்கிரஸ் ஆகிய இரு அவைகளைக் கொண்ட நாடாளுமன்றம் ஜனவரி 6 ஆம் தேதி கூடியது.

இதேநேரத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களிடையே டிரம்ப் உரையாற்றிக்கொண்டிருந்தார். . வெளியே பேசிய டிரம்ப், “நான் தான் தேர்தலில் வெற்றிபெற்றேன். அதற்கு மாறாக முடிவெடுக்கும் நாடாளுமன்றத்துக்கு எதிராக வாருங்கள் திரள்வோம். நமது துணிச்சலான செனட்டர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களை உற்சாகப்படுத்துவோம்”என்று அழைப்பு விடுத்தார். அவர் ஒருபக்கம் பேசிக் கொண்டிருக்க டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க கேபிட்டலின் மேற்கு சுவரில் ஏறினார்கள்.

ஏறி உள்ளே குதித்து நாடாளுமன்றத்தின் கண்ணாடிகள் உள்ளிட்ட பொருட்களைத் தாக்கினார்கள்

கூட்டுக் கூட்டம் தொடங்கியபோது டிரம்ப் ஆதரவாளர்கள்​​ படிகளில் அமைக்கப்பட்ட போலீஸ் தடைகளைத் தாண்டிச் சென்றனர். வழிகளைக் கடந்தனர்.. அப்போது அவர்கள் துரோகி துரோகி என்று கத்திக் கொண்டே சென்றனர். இந்த அமளியால் திடீரென செனட், காங்கிரஸ் ஆகிய இரு அவைகளும் நிறுத்தப்பட்டன.

வெளியே கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. அப்போது எம்.பி.க்களுக்கு கண்ணீர் புகையில் இருந்து காக்கும் கவசம் வழங்கப்பட்டது.. அதற்குள் பல தடைகளைக் கடந்து பல பொருட்களை உடைத்து டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தனர். அவர்களைத் தடுக்கும் பொருட்டு போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். நால்வர் காயமடைந்தனர்.

டிரம்ப்பின் வெளிப்படையான முழு தூண்டுதலால், அமெரிக்க நாடாளுமன்றம் தாக்கப்பட்டிருப்பதற்கு உலகம் முழுதிலிருந்தும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

**-வேந்தன்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share