மக்கள் அலட்சியமே கொரோனா பரவலுக்கு காரணம்: ராமதாஸ்

politics

பொதுமக்கள் அலட்சியமே கொரோனா பரவலுக்கு காரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கோவையில் இன்று முதல் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. அதுபோன்று கொரோனா பரவல் அதிகரிக்கலாம் என்பதால், ஆடிக் கிருத்திகை உள்ளிட்டவற்றுக்குக் கோயில்களில் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுமக்களின் அலட்சியமே கொரோனா பரவலுக்கு காரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 68 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததால், அடுத்த சில வரங்களில் கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வந்து விடும் என்று அனைவரும் நம்பிக்கொண்டிருந்த வேளையில், தினசரி பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை, ஈரோடு, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகின்றன. இது கண்டிப்பாகக் கவலையளிக்கக்கூடிய தகவல் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இரண்டாவது அலைக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்து நம்பிக்கையுடன் சிந்தித்துக் கொண்டிருந்த நாம், மூன்றாவது அலை வந்து விடுமோ என்று அஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்திருப்பதற்கு பொதுமக்களாகிய நம்மில் பெரும்பான்மையினர் காட்டிய அலட்சியமும், அத்துமீறல்களும்தான் காரணம்.

தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியில் வரக் கூடாது; வெளியில் வந்தால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்; மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் இரட்டை முகக்கவசம் அணிய வேண்டும்; பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்; அடிக்கடி கைகளைச் சுத்தப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்தது. அவற்றைப் பின்பற்றி நடக்கும்படி ஒன்றிய, மாநில அரசுகள் வலியுறுத்தின.

கொரோனா பாதிப்புகளும், உயிரிழப்புகளும் உச்சத்திலிருந்தபோது மட்டும் மனதளவில் அஞ்சி, வெளியில் வராமல் இருந்த பொதுமக்கள், கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியவுடன் எந்த அச்சமும் இல்லாமல் வீடுகளை விட்டு வெளியில் நடமாடத் தொடங்கினார்கள். முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கையைக் கூட அவர்கள் பின்பற்றவில்லை. சென்னையில் குடிசைப் பகுதிகளில் 41% மக்களும், குடிசைகள் அல்லாத பகுதிகளில் 47% மக்களும் தான் முகக்கவசம் அணிவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

மீன் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள், கடைகள், துக்க நிகழ்வுகள், சுப நிகழ்வுகள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றில் சமூக இடைவெளியைச் சற்றும் மதிக்காமல் கூட்டம், கூட்டமாக மக்கள் கூடியதன் விளைவாகவே கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்தும், கொரோனா விதிகளை மக்கள் பின்பற்றி நடக்கக் கோரியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் செய்திருக்கும் எச்சரிக்கை உண்மையானது தான். பொதுமக்கள் விழிப்புடனும், கொரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றியும் நடக்காவிட்டால் தமிழ்நாட்டில் மூன்றாவது அலையைத் தடுக்க முடியாது.

கொரோனா முதல் அலையிலும், இரண்டாவது அலையிலும் நாம் இழந்தவை ஏராளம். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களின் உயிர் நண்பர்கள், நெருங்கிய உறவுகளில் குறைந்தது ஒருவரையாவது கொரோனாவுக்கு பலி கொடுத்திருக்கிறோம். அரசுக்கும், தனிநபர்களுக்கும் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் மதிப்பிட முடியாதவை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பள்ளிகளுக்குச் செல்லாமல் குழந்தைகள் மனதளவில் அனுபவித்து வரும் கொடுமைகள் வர்ணிக்க முடியாதவை. மூன்றாவது அலையின் பாதிப்புகள் இன்னும் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கப்படும் நிலையில், நாமே அதற்கு அழைப்பு விடுக்கக் கூடாது.

கொரோனா மூன்றாவது அலையைத் தடுப்பது அரசின் கைகளிலும், பொதுமக்களின் கைகளிலும் தான் உள்ளது. அரசு அதன் கடமையைச் சரியாகச் செய்து வரும் நிலையில், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டும்தான் பாதிப்புகளைத் தடுக்க முடியும். எனவே, பொதுமக்கள் இனியாவது தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *