xமீம்ஸ், சேர்ஷாட் மூலம் கொரோனா விழிப்புணர்வு!

politics

தமிழகம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.

தமிழகத்தில் மே மாதம் நாளொன்றுக்கு 36,000 ஆக இருந்த கொரோனா பெருந்தொற்றின் எண்ணிக்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தற்போது நாளொன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் கீழாகக் குறைந்துள்ளது.

மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை 95,211ல் இருந்து 1,74,829 ஆகவும் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் 27,563-ல் இருந்து 53,689 ஆகவும் மற்றும் தீவிர சிகிச்சைக்கான படுக்கைகள் 7,154-ல் இருந்து 10,571 ஆகவும் தமிழக அரசு உயர்த்தியது.

3075 மருத்துவர்கள், 5362 செவிலியர்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள 7,754 சுகாதாரப் பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டனர். இதுவரை, 2. 62 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு 2% கீழ் குறைந்துள்ள நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு அன்றாட பணிகள் நடந்து வருகின்றன.

எனினும் மூன்றாம் அலை வரலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பதால், அதனைத் தடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத் தமிழகம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

இன்று (ஜூலை 31) முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா விழிப்புணர்வுத் தொடர் பிரச்சாரத் தொடக்க விழாவினை காலை 10 மணியளவில் கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கான கொரோனா சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு கண்காட்சியினைத் தொடங்கி வைத்து, மூன்றாம் அலையை தடுப்பதற்கு உறுதிமொழியும், விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவிக்கப்பட்ட #MASKUpTN என்ற ஹேஷ்டேகை இளைஞர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில், SHARECHAT செயலியினையும் கொரோனா பேட்ஜினையும் வெளியிட்டார்.

அதன்பின்பு, கொரோனா விழிப்புணர்வு காணொலியினை வெளியிட்டு, LED பொருத்தப்பட்ட வாகனங்களின் மூலம் கொரோனாவிற்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.

ஒருவார காலத்துக்கு, தினந்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல்வேறு துறைகள் மூலம் ஒருங்கிணைந்து நடத்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

துண்டுப் பிரசுரங்கள், சிற்றேடுகள், ட்விட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சி நேர்காணலிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,

கடை வீதிகள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் வரும் மக்களிடையே முகக்கவசம் அணியவும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,

வியாபாரிகள் நலச்சங்கங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,

தனியார் மருத்துவமனைகள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும்,

மாணவர்களுக்கிடையே குறும்படப் போட்டிகள், ஓவியப்போட்டிகள், கொரோனா விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்குதல், எப்.எம் ரேடியோ மூலம் கேள்வி பதில் நிகழ்ச்சிகள், மீம்ஸ் உருவாக்குதல் போன்றவற்றை நடத்தவும், கிராமிய கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,

நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கவும்,

கிராம அளவில் / வார்டு அளவில் / மண்டல அளவில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளை அந்தந்த மாவட்டங்களில் கௌரவித்துப் பரிசுகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசிய முதல்வர், “நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவும், மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென” கேட்டுக்கொண்டார்.

** -பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *