வள்ளலார் பிறந்தநாள் இனி ‘தனிப்பெருங்கருணை நாள்’!

politics

வள்ளலார் பிறந்தநாள் இனி ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை நாளாக கடைபிடிக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று(அக்டோபர் 5)வள்ளலார் ராமலிங்க அடிகளார் பிறந்தநாள் அனுசரிக்கப்படுகிறது. வள்ளலாரின் 199வது பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவில், சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் விழாக்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” 1823ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 5ஆம் நாள் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூர் என்ற கிராமத்தில் ராமய்யாப் பிள்ளை- சின்னம்மையார் என்ற தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர்தான் வள்ளலார் எனும் ராமலிங்க அடிகளார்.

கருணை ஒன்றையே வாழ்க்கைநெறியாகக் கொண்டு வாழ்ந்தார். அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவினார். இவர் வடலூரில் சத்தியஞான சபையை எழுப்பினார்.

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய இவர், மக்களின் பசித்துயர் போக்க சத்தியதர்ம சாலையை நிறுவினார். அவர் ஏற்றிய அடுப்பு இன்று வரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது. மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநடைகளை எழுதினார். இவர் பாடிய பாடல்களின் திரட்டு ’திருவருட்பா’ என்று அழைக்கப்படுகிறது. இது 6 திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ளது.

திருவருட்பா ஆறாம் திருமுறையில், எந்தச் சமயத்தின் நிலைப்பாட்டையும் எல்லா மதநெறிகளையும் சம்மதம் ஆக்கி கொள்கிறேன் என்றார். சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர், சத்திய தருமச்சாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கினார். பசிப்பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினார்.

அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி! என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒளி இன்றும்

அறியாமையை நீக்கி அன்பை ஊட்டி வருகிறது. அவர் பிறந்தநாளான அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் “தனிப்பெருங்கருணை நாள்” எனக் கடைப்பிடிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *