சென்னையில் டிசம்பர் 31 இரவு 12 மணிக்கு மேல் வாகன போக்குவரத்திற்கு சென்னை காவல் துறை தடை விதித்துள்ளது.
ஒமிக்ரான் பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 அன்று கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல அனுமதி இல்லை. பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடவும், கிளப்புகள், ஹோட்டல்கள், பண்ணை வீடுகளில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விட்டிருந்தார்.
குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்றும், புதிய திரிபான ஒமிக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. அதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தினசரி கொரோனா பரிசோதனைகளையும் அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் டிசம்பர் 31 அன்று இரவு 12 மணிக்கு மேல் சென்னையில் போக்குவரத்திற்கு தடை விதித்து சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” தற்போது உள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு மேலும் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், வருகிற 31ஆம் தேதி இரவு 12 மணிக்குமேல் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான வாகன போக்குவரத்தை தவிர, மற்ற வாகன போக்குவரத்திற்கு 1 ஆம் தேதி அன்று காலை 5 மணி வரை அனுமதி இல்லை. எனவே பொதுமக்கள் அனைவரும் 31ஆம் தேதி அன்று இரவு 12 மணிக்கு முன்பே தங்கள் பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**கோயில்களில் அனுமதி**
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 அன்று இரவு கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டு புத்தாண்டையெட்டி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிற நிலையில், புத்தாண்டு அன்று கோயில்களில் வழிபடுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு பதிலளித்துள்ள இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ”நாளை இரவு கோயில்கள் திறந்திருக்கும். நாளை கோயில்களில் வழிபடுவதற்கு தடை இல்லை. அரசு அறிவித்துள்ள நோய்த்தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
**வினிதா**
�,