தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பருவமழை காரணமாகப் பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாகச் சென்னை, மழைநீரில் தத்தளித்து வருகிறது. 35ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. திரும்பும் திசையெல்லாம் தீவு போல் காட்சி அளிக்கிறது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களாக ஓயாமல் மழை பெய்த நிலையில், நாளை முதல் படிப்படியாக மழை பொழிவு குறையும் என்றும் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் திரும்பப்பெறப்படுகிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இன்று(நவம்பர் 11) மாலை 5.15 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத் தொடங்கியது. சென்னையில் இருந்து 30 கி.மீ தூரத்தில் நிலைகொண்டிருக்கிறது. கடந்த 6 மணி நேரமாக 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்து 2 மணி நேரத்திற்கும் அதே வேகத்தில் நகர்ந்து கரையைக் கடக்கும். அதிகனமழைக்கு வாய்ப்பில்லை என்றாலும் கூட கனமழை பெய்யலாம்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் தரைக் காற்று அதிகமாக வீசக்கூடும். 30 கி.மீ வேகத்திலிருந்து 40 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும்.
மழையைப் பொறுத்தவரையில் சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை முதல் மழை குறையும். சென்னைக்கு விடுக்கப்பட்ட அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுகிறது. காற்று மற்றும் கனமழைக்கான ரெட் அலர்ட் தொடர்கிறது. இன்று இரவு வரை விட்டு விட்டு மழை பெய்யும், கனமழைக்கும் வாய்ப்புண்டு.
இதுவரை அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 63 மி.மீ, மீனம்பாக்கத்தில் 37 மி.மீ, , எண்ணூரில், கடப்பாக்கத்தில் தலா 43 மி.மீ, மழை பதிவாகியுள்ளது என்று தெரிவித்தார்.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புப் படி, இன்னும் சற்று நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கவுள்ளது.
**-பிரியா**
�,