உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (டிசம்பர் 25) கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்
‘கோபமும் பொறாமையும் மனிதனைக் கொன்றுவிடும் சக்தி படைத்தவை’, ‘நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதை உடனே செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்’ என்பன போன்ற தனி மனிதரின் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் போதனைகளை வழங்கிய புனிதர் இயேசுநாதர். அவர் பிறந்த திருநாள் ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் 25 அன்று உலகமெங்கும் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
அனைத்துச் சமுதாய மக்களையும் அரவணைத்து அன்பு காட்டிடும் இந்த அரசின் சார்பில் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
கவலைகள் மறந்து, இன்பம் புகுந்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடி மகிழும் எனதருமை கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி
மிகச் சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயேசு கிறிஸ்து பிறந்த இந்நாளில் அனைவரது வாழ்விலும் இனிமை தங்கவும், மகிழ்ச்சி பெருகவும், செல்வம் சேரவும், ஆரோக்கியம் கூடவும், எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் என்று வேண்டுகிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
இயேசுபிரான் விரும்பியதைப் போல, இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் தொடங்கி உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும். போட்டி பொறாமைகள் அகல வேண்டும். ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும்.
உலகம் வளம் பெற வேண்டும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில் உறுதி ஏற்போம் என்று கூறி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்
உலகம் முழுவதும் அன்பு, கருணை, ஆனந்தம் ஆகியவை நிலவ வேண்டும் என்று விரும்பியவர் இயேசுபிரான். மனிதர்களிடத்தில் மட்டுமின்றி மற்ற உயிர்களிடத்திலும் பாசத்தையும், கருணையையும் வெளிப்படுத்தியவர் அவர்.
இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
இயேசுவின் கொள்கைகளும், போதனைகளும் தான் உலகம் இன்று கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஆகும். இயேசுவின் கொள்கைகள் மட்டுமின்றி அவற்றை பின்பற்றுவோரும் வெற்றி பெறுவது உறுதி. எனவே, இந்த உலகில் பொருள் படைத்தவர்கள் அனைவரும் இல்லாதவர்களுக்கு உதவிகளை வாரி வழங்குவோம்.
பணமும், பொருளும் இல்லாதவர்கள் அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம். அதன் மூலம் இயேசு விரும்பிய அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தும் பெருகுவதற்காக உழைக்க உறுதி ஏற்போம் என்று கூறி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
அனைவரிடமும் அன்பு காட்டி, கருணையின் வடிவமாய் விளங்கிய இயேசுபிரான் பிறந்த இந்த திருநாளில் அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விசிக தலைவர் திருமாவளவன்
இயேசு பெருமானின் போதனைகள் வெறுப்பு அரசியலுக்கு எதிரானது. உயர்வு – தாழ்வு என்னும் பாகுபாட்டுக்கு எதிரானது. சாதி, மதம், மொழி, இனம், தேசம் போன்ற அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் சகோதரத்துவத்தால் இணைக்கக்கூடியது.
ஆகவே தான், கிறிஸ்தவம் உலகமெங்கும் பரவி இன்றும் வெற்றிகரமாக மனிதகுலத்தை வழிநடத்தி வருகிறது. இயேசு பெருமான் சகோதரத்துவத்தின் அடையாளமாகும்.
எனவே அவரைப் போற்றுவது என்பது சகோதரத்துவத்தைப் போற்றுவதேயாகும். சகோதரத்துவத்தைப் போற்றும் யாவருக்கும் எனது மனம் நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்
வரலாறு காணாத பெருமழையால் பெருந்துயரம் கண்ட மக்களின் வாழ்வியல் சூழல் மாறி, இயல்புநிலை திரும்பவும், மகிழ்ச்சி பெருகவும் இனிய கிறிஸ்துமஸ் தினத்தில் எல்லாம் வல்ல இயேசு கிறிஸ்து ஆசிர்வதிக்கட்டும். உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
நேற்று முளைத்த காளான் உதயநிதி: ஜெயக்குமார்